The Devil’s Double (2011)

தமது உயிர்குறித்து எந்தநேரமும் ஆபத்தை ஏதிர்கொண்டிருக்கும் பிரபலங்கள் அல்லது இயக்க தலைவர்கள் தம்மை போலவே தோற்றம் கொண்ட டூப்களை வைத்திருப்பார்கள் என்பது நாம் கேள்விப்பட்ட செய்திதான். ஹிட்லர், சதாம் ஹுசைன், பின்லேடன் போன்றவர்கள் தமக்கு டூப்களை வைத்திருந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் தானே? 2009 மே மாதத்தில் இலங்கையிலும் இந்த டூப் பற்றிய வதந்திகள் அதிகமா உலாவியிருந்தன. சரி நமக்கெதுக்கு அதெல்லாம்..


The Devil’s Double என்ற இந்த திரைப்படம் சதாமின் மகனான உதய் ஹுசைனின் டூப் பற்றி பேசுகிறது. தோற்றத்தில் உதய் ஹுசைனை ஒத்திருக்கும் Latif Yahia வலுக்கட்டாயமாக உதய்யின் போலியாக நடிக்க வைக்கப்படுகிறான். சாதாரண படைவீரனாக இருந்த Latif Yahia உதய்யின் உலகத்துக்குள் மெல்ல அறிமுகமாகும் சமயத்தில், ஒரு வலுமிக்க சர்வாதிகாரியின் மகனது அதிகார உலகம் நமக்கு முன் விரிய ஆரம்பிக்கிறது.

அதிகாரம் என்பதையும் கடந்த சர்வாதிகாரம் எதையும் செய்துவிடமுடியும் என்ற உற்சாகத்தை மனிதர்களுக்கு கொடுத்துவிடுகிறது. யாரையும் எந்த இடத்திலும் கொல்ல முடிகிறது. எந்த பெண்ணையும் தூக்கி வந்து பலாத்காரத்துக்கு உட்படுத்திவிட முடிகிறது. பள்ளி செல்லும் சிறுமிகளைக்கூட. இதுதான் உதய்யின் உலகம். ஒரு சர்வாதிகாரியின் சைக்கோ மகன் உதய், அவனது செயல்களில் சைக்கோத்தனமும், அதிகார போதையும் அளவுக்கதிகமாகவே வெளிப்படும். உதாரணமாக, ஒரு பார்டியில் கலந்துகொண்டிருக்கும் விருந்தினர்களை நோக்கி “எல்லோரும் ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக நடனமாடுங்கள்” என்கிறான். மறுபேச்சின்றி எல்லோரும் அப்படியே செய்கிறார்கள். உயிர்பயம் !!

Latif ஐ அழைத்துவந்து உதய் போல சில உடலமைப்புகளை மாற்றுவதற்கான சிகிச்சைகளும், உதயின் மேனரிசங்களை பழகுவதற்கான பயிற்சியும் நடந்துகொண்டிருக்கும் . தான் அனுபவிக்கும் அத்தனை வசதிகளையும் latif க்கு கொடுக்கும் உதய் அவனோடு சேர்ந்தே குளிக்கிறான். அந்த சமயத்தில் latif இன் ஆணுறுப்பு சற்று பெரிதாக இருப்பதை கவனிக்கும் உதய் அதன் அளவை சிறுசாக்கும்படி சொல்வான். இதை யார் பார்க்கப்போகிறார்கள் என்பதற்கு “பக்தாத் பெண்கள் எல்லாருக்கும் அதை பற்றி தெரியும்” என்பான் உதய். அந்த ஒரு வசனமே அவனது சர்வாதிகாரம் பற்றி விளக்க போதுமானதாக இருக்கும்.

இவனது செயல்கள் பிடிக்காத டூப் Latif Yahia ஒரு கட்டத்தில் தன் காதலியோடு தப்பியோடி, உதய்யை பழிவாங்க சந்தர்ப்பம் தேடுகிறான்.

உண்மைச்சம்பவங்களை கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. Latif Yahia எழுதிய புத்தகத்திலிருக்கும் தகவல்களை இந்த திரைப்படத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். விறுவிறுப்பானதொரு பொலிடிகல் த்ரில்லர்.
Categories:
Similar Videos

0 comments: